சனி, 19 ஜூலை, 2014

விழியதிகாரம் -

இருவிழி பார்வையில்
எத்தனை எத்தனை
கவிதைகள்..!!
அடடா..!- அவள்
முகத்தாளில் துடிக்கும்
அழகு முட்டைமுழி
விழியழகில்
தினம் தினம்
செத்துவிடத்துடிக்கிறேன்..

அந்த இடது விழியில்
எனை அடகுவைத்து
வலது விழியில்
என்னை தினமும்
மீட்டெடுத்துக் கொள்கிறேன்.

என்
காதல் உணர்வேறிய
பாலைவன மனவெளியில்
ஒரு
காதல் செடியை
நட்டுவிட்டாள்
இந்த
விழியழகி...!
என் வாலிபத் தேசத்தில்
என் கவிக்குவியல்களை
கொள்ளையடிக்க
வந்த
கொள்ளைக்காரி..!

தேகத்தின் மோகத்தில்
முளைத்திருக்கும் சில காதல்.
பார்வையில் தொடங்கி
படுக்கை அறையில்
முடிந்திருக்கும் சில காதல்.
இந்த காதல்
விழியில் தொடங்கி
உணர்வுகளில் பயணித்து
விழியும் விழியும்
முட்டிக் கொஞ்சி
விழிகளின் முழிகளில்
முடிந்து தொடங்கும்
தொடங்கி முடியும்
ஒரு பெயரிடப்படாத காதல்.
என்னை அறிந்த
அவளும்
அவளுக்குள் வாழம்
நானும்
பேசிக்கொள்கிறோம்
காதலையும் தாண்டிய
ஓர் உறவில்...!


இப்படியும் நடக்குமா?
இவ்வுறவை நான்
துளியும் எதிர்பார்க்கவில்லை.
அவளை காதலிக்கமுடியாதே
என்று ஏங்கியதும் இல்லை
அவளை ஏன் காதலித்தேன்
என்று சிந்திக்கவும் மனமில்லை
இப்படியே என்
மனம் அலைபாயட்டும்.
இப்படியே என்
ரசனைகளை அவள்
ரசித்து தின்றுகொல்லட்டும்.

உடல சேரா
ஓர் உறவில்
மனம் என்ன தவறு
செய்திடப் போகிறது.. ?


இந்த உறவில்
காமனின் ஆட்சி
இல்லாமல் இல்லை..
ஆனால்
அந்த காமம்
இந்த உலகம்
சொல்லும்
வெற்று உணர்ச்சிகள்
எதுவும் சற்றும் இல்லை.

காமத்தை பார்க்கும்
பார்வையில் எங்கள்
காதல் வித்தியாசப்படும்.
ஆம்
காமத்தின் வாசனையில்
காமத்தை தீண்டாமல்
காதல் எல்லையில் நின்று
காதலை
புனிதப்படுத்துகிறோம்
அல்லது
புதியதாய் புனிதப்படுத்துகிறோம்
காதல் மீறிய ஓர் உறவை..!


வழக்கமாக அலட்டிக்கொள்ளும்
காதலில் வாழும் சராசரி
காதலர்கள் நாங்கள் அல்ல.!
ஒரு மெய்ஞானத்தை ஆராய்ந்து
இந்த விஞ்ஞானத்தை கைப்பிடித்து
கற்பனைஉலகில்
உலாவிக்கொண்டிருக்கும்
விசித்திர வித்தியாசமானவர்கள்...!
ஆம்!
நாங்கள்
காதலுக்கான மாற்று சொல்லற்று
விக்கி விக்கி தவிக்கிறோம்.
இந்த விக்கல் தவிப்புக்கூட
நான்கு உதடுகள் சந்திப்பின்
ஒரு நிமிட முத்தத்திலோ..
அவள் விழிக்குதிரை
மீதேறிய என்
உதட்டுக்காரனின் விளையாட்டிலோ
நின்றுவிடலாம்...!
நின்று மீண்டும் ஏங்கவிடலாம்...!


என்றாவது
ஒருநாள்
நான்
காணவில்லையென்றால்
என் கவிதைகள்
பதிவாகவில்லையென்றால்

எனை
எங்கும் தேடாதீர்கள்..!

நான்
அவளின்
இருவிழிகளுக்கு
மத்தியில்
செத்துக்கொண்டிருப்பேன்
இல்லையென்றால்
விழியதிகாரம் படைத்து
வாழ்ந்துக்கொண்டிருப்பேன்.
---------------------------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.

மீசை முளைத்த பறவை

அழகான பறவையல்ல அது
ஆனாலும்
அதன் அலகு அழகு
அதன் சிறகு அழகு.
நுண்ணிய கண்கள் இரண்டு
நுணுக்கமான பார்வையும் உண்டு
இரண்டு கால்கள் தான்
மூன்றாவதாய் ஒரு கை..!
எனக்கு வியப்பு ஏனோ ?
இப்பறவை
சிறகை விரித்தால்
விரிகிறது ஒரு விசித்திரப் பேனா..!

கிளி பறவை பேசும்
குயில் பறவை பாடும்
மயில் பறவை ஆடும்
இம்மூன்றும் இப்பறவை செய்யும்.
இப்பறவை எனக்காக
படைக்கப்பட்டது..!

நன்றாக கவனியுங்கள்..!

எனக்காக படைக்கப்பட்டிருப்பது
பாவை அல்ல
பறவை....!

அடடா....
இதோ இதோ
இப்போதுதான் கவனித்தேன்
பறவை அலகு ஏன் அழகு?
தெரியுமா? அதன்
அலகு மேல் ஒரு மீசை...!
நிச்சயம் பாரதியின் மீசையேதான்..!
சந்தேகமில்லை
கவனித்துவிட்டேன்...
துடிக்கிறது..எனை
தூண்டுகிறது
எதையோ எழுதிட ...!

என்ன எழுதிடவேண்டும்.
யோசித்தேன்.
காதல் கவிதை....!

என்னருகில் வந்த
என் பறவை
மூவிரலில் ஒருவிரலை
கொத்தியது.

“காதலித்தவன் எவனும் எழுதிட முடியும்
நீ சிந்தனையை மாற்று “

இந்த மானிடர்களுக்கு
தத்துவத்தை கவித்துவமாக
எழுதி அசத்தலாம்.
யோசித்தேன் - மீண்டும்
என் மூவிரலில்
அடுத்த விரலை
பலமாக கொத்தியது.

“ கண்ணதாசன் எழுதிவிட்டார்
நீ உன்னை நீருபித்துக்காட்டு “

இருவிரல் காயம்பட்டுவிட்டது
ஒருவிரல் மிச்சம் இருக்கிறது
எப்படி எழுதிட முடியும்..?

”ஏய் பறவையே.....!
நான் எழுத்தாளன்
அவதாரம் எடுத்தவன்.
எதையும் எழுதும்
வல்லமை படைத்தவன்.
என்னை ஏன்
இப்படி இம்சிக்கிறாய்..?”

பறவை சிறகை விரித்தது.
ஓர் அதிசய எழுதுகோலை
இறகுகளிலிருந்து இறக்கியது.
அலகால் எடுத்து
அழகாக என் சட்டப்பையில் நுழைத்து,
என் தலைமயிரை கொத்தி
தூக்கிச் சென்றது.

”பறவையே.....
என்ன செய்கிறாய்...?!
அய்யோ
எனை விடு
எனை விட்டுவிடு...”

எங்கோ பயணித்தது
இராத்திரி நேரமோ அது..
தெரியவில்லை...

ஓரிடத்தில் எனை கிடத்திவிட்டு

“ அதோ பார்...” என்ற
பறவை சொன்ன
திசை நோக்கினேன்.

ஏதோ நிகழ்வுத்திரை...!
எதுவும் புரியவில்லை

ஆ...!
ஆடைக்கிழிக்கப்பட்ட
நிலையில் ஒரு சிறுமி....!
யாரந்த காமப்பன்றி..?
அய்யகோ.......!
பலாத்காரமா.....!?

”அடே அடே
சிறுமியடா அது......!”

எழுந்து ஓட முயன்றேன்.......!
எழு முடியவில்லை
ஓட முடிய வில்லை.....!

என்னாயிற்று எனக்கு.!?
”பறவையே....!
அந்த சிறுமியை
காப்பாற்ற வேண்டும்...
என்னால் இயங்கமுடியவில்லை
என்ன செய்தாய் என்னை?”

மீண்டும் பலமாக
பாரதி மீசைக்கொண்ட
அதன் அலகால்
என் இதயத்தில் கொத்தியது


உடலைவிட்டு உயிரை
கிழிக்கும் சத்தம்..........!

திடுக்கிட்டேன்
எழுந்தேன்...
என்னருகில் அப்பறவை இல்லை
ஆனாலும்
என் மூவிரலில்
இரு விரல் காயமடைந்திருக்கிறது.
ஒரு விரல் எதற்கோ துடிக்கிறது.
கனவா...இது...?
சோதித்துப்பார்க்க

கன்னத்தை கிள்ள
முகத்தை தடவினேன்...
புதிதாக ஒன்று தட்டுப்பட்டது.
என் மீசையில்
பாரதியின் மீசை.........!


சட்டைப்பையில்...?
ஆம்...
ஆம்...
அந்த பறவை தந்த
விசித்திரப்பேனா....!

அப்படியென்றால்...........!
நான் எழுத வேண்டியது.............!!??


பாரதி மீசையுடன்
புதியதாய் கிடைத்த
பேனாவுடன் எழுத துவங்கினேன்.
முதல் வரி...


=காமவெறிப்பிடித்த
=குடிக்கார நாய்களின்
=ஆண் உறுப்புகளை
=வெட்டி வீழ்த்து !
=என் இந்திய சட்டங்களே....!!


=========================================
குறிப்பு : ” இந்த விசித்திரப்பறவை ” யை எனக்கு கொடுத்த அருமை தங்கை கிருத்திகா தாஸ்-க்கு நன்றிகள்..!
===========================================
இரா.சந்தோஷ் குமார்

இரா-வின் நாளைய விடியல்

சொல்லில் உன்னைஅடிக்கவா? - கவிதை
சொல்லி உன்னை அணைக்கவா?
வில்லால் உனை கொன்றிடவா?- வான
வில்லாய் உனை வென்றிடவா?-கவிதை
விரலால் உனக்கு எழுதிடவா? -எச்சரிக்கை
விரலை உனக்கு காட்டிடவா?

✿ ✿

சின்ன சின்ன மழைத்தூறல்களில்
சிறிய சிறிய மழலைவாசமிருக்கும்.
என்னை என்னை நீ தெரிந்திடும்போது
உன்னில் உன்னில் அன்பு தெளிவுப்பிறக்கும்.

✿ ✿

பெரியோர் சிறியோரானால்
சிறியோர் பெரியோர் ஆகிடுவார்
சிறியோர் பெரியதவறிழைத்தால்
பெரியோர் சிறுமனதிலாவது
பெரியமன்னிப்பு வழங்கிடலாகதோ??

✿ ✿

இன்றைய அந்தியில்
செத்துவிடும் சூரியனை
ஒரேயொரு கவியெழுதி
உதயசூரியனாய் என்னால்
தட்டியெழுப்ப முடியும்.
அக்கவியின் தலைப்பு
”நாளைய விடியல்” என்றிருக்கும்

✿ ✿

சீர்கேடுகளை சீர்ப்படுத்த
”இரா ”பொழுதில் சிந்தனை
உலாவ நான் ஆரம்பித்தால்
நிலாவும் என் கைப்பிடிக்கும்- வெற்றி
விழாவும் விடியலில் அரங்கேறும்.

✿ ✿

எதிரி என்று எவரும் இல்லை-என்
எதிரில் நிற்க துணியாதவருக்கு
எதிரி என்பதும் எதிர்ச்சொல்லே.

✿ ✿

உரசி பார்க்க வாருங்கள்
நீங்கள் எவ்வாறு இருப்பினும்
நான் சந்தனமாக மணப்பேன்.
வாருங்கள் எனை உரசிப்பாருங்கள்.

✿ ✿

கர்வம் பிடித்துவிட்டதோ எனக்கு..?
இல்லை இல்லை ஒருப்போதும் இல்லை.
என்று எப்போதும் சொல்லப்போவதில்லை
ஆம் கர்வம் தான்............!
நான் அப்படித்தான்....................!
தீண்டாத வரை நான் பூவின் சந்தோஷம்
தீண்டினால் நான் புயலின் கொடூரம்.


---இரா.சந்தோஷ் குமார்