சனி, 19 ஜூலை, 2014

மீசை முளைத்த பறவை

அழகான பறவையல்ல அது
ஆனாலும்
அதன் அலகு அழகு
அதன் சிறகு அழகு.
நுண்ணிய கண்கள் இரண்டு
நுணுக்கமான பார்வையும் உண்டு
இரண்டு கால்கள் தான்
மூன்றாவதாய் ஒரு கை..!
எனக்கு வியப்பு ஏனோ ?
இப்பறவை
சிறகை விரித்தால்
விரிகிறது ஒரு விசித்திரப் பேனா..!

கிளி பறவை பேசும்
குயில் பறவை பாடும்
மயில் பறவை ஆடும்
இம்மூன்றும் இப்பறவை செய்யும்.
இப்பறவை எனக்காக
படைக்கப்பட்டது..!

நன்றாக கவனியுங்கள்..!

எனக்காக படைக்கப்பட்டிருப்பது
பாவை அல்ல
பறவை....!

அடடா....
இதோ இதோ
இப்போதுதான் கவனித்தேன்
பறவை அலகு ஏன் அழகு?
தெரியுமா? அதன்
அலகு மேல் ஒரு மீசை...!
நிச்சயம் பாரதியின் மீசையேதான்..!
சந்தேகமில்லை
கவனித்துவிட்டேன்...
துடிக்கிறது..எனை
தூண்டுகிறது
எதையோ எழுதிட ...!

என்ன எழுதிடவேண்டும்.
யோசித்தேன்.
காதல் கவிதை....!

என்னருகில் வந்த
என் பறவை
மூவிரலில் ஒருவிரலை
கொத்தியது.

“காதலித்தவன் எவனும் எழுதிட முடியும்
நீ சிந்தனையை மாற்று “

இந்த மானிடர்களுக்கு
தத்துவத்தை கவித்துவமாக
எழுதி அசத்தலாம்.
யோசித்தேன் - மீண்டும்
என் மூவிரலில்
அடுத்த விரலை
பலமாக கொத்தியது.

“ கண்ணதாசன் எழுதிவிட்டார்
நீ உன்னை நீருபித்துக்காட்டு “

இருவிரல் காயம்பட்டுவிட்டது
ஒருவிரல் மிச்சம் இருக்கிறது
எப்படி எழுதிட முடியும்..?

”ஏய் பறவையே.....!
நான் எழுத்தாளன்
அவதாரம் எடுத்தவன்.
எதையும் எழுதும்
வல்லமை படைத்தவன்.
என்னை ஏன்
இப்படி இம்சிக்கிறாய்..?”

பறவை சிறகை விரித்தது.
ஓர் அதிசய எழுதுகோலை
இறகுகளிலிருந்து இறக்கியது.
அலகால் எடுத்து
அழகாக என் சட்டப்பையில் நுழைத்து,
என் தலைமயிரை கொத்தி
தூக்கிச் சென்றது.

”பறவையே.....
என்ன செய்கிறாய்...?!
அய்யோ
எனை விடு
எனை விட்டுவிடு...”

எங்கோ பயணித்தது
இராத்திரி நேரமோ அது..
தெரியவில்லை...

ஓரிடத்தில் எனை கிடத்திவிட்டு

“ அதோ பார்...” என்ற
பறவை சொன்ன
திசை நோக்கினேன்.

ஏதோ நிகழ்வுத்திரை...!
எதுவும் புரியவில்லை

ஆ...!
ஆடைக்கிழிக்கப்பட்ட
நிலையில் ஒரு சிறுமி....!
யாரந்த காமப்பன்றி..?
அய்யகோ.......!
பலாத்காரமா.....!?

”அடே அடே
சிறுமியடா அது......!”

எழுந்து ஓட முயன்றேன்.......!
எழு முடியவில்லை
ஓட முடிய வில்லை.....!

என்னாயிற்று எனக்கு.!?
”பறவையே....!
அந்த சிறுமியை
காப்பாற்ற வேண்டும்...
என்னால் இயங்கமுடியவில்லை
என்ன செய்தாய் என்னை?”

மீண்டும் பலமாக
பாரதி மீசைக்கொண்ட
அதன் அலகால்
என் இதயத்தில் கொத்தியது


உடலைவிட்டு உயிரை
கிழிக்கும் சத்தம்..........!

திடுக்கிட்டேன்
எழுந்தேன்...
என்னருகில் அப்பறவை இல்லை
ஆனாலும்
என் மூவிரலில்
இரு விரல் காயமடைந்திருக்கிறது.
ஒரு விரல் எதற்கோ துடிக்கிறது.
கனவா...இது...?
சோதித்துப்பார்க்க

கன்னத்தை கிள்ள
முகத்தை தடவினேன்...
புதிதாக ஒன்று தட்டுப்பட்டது.
என் மீசையில்
பாரதியின் மீசை.........!


சட்டைப்பையில்...?
ஆம்...
ஆம்...
அந்த பறவை தந்த
விசித்திரப்பேனா....!

அப்படியென்றால்...........!
நான் எழுத வேண்டியது.............!!??


பாரதி மீசையுடன்
புதியதாய் கிடைத்த
பேனாவுடன் எழுத துவங்கினேன்.
முதல் வரி...


=காமவெறிப்பிடித்த
=குடிக்கார நாய்களின்
=ஆண் உறுப்புகளை
=வெட்டி வீழ்த்து !
=என் இந்திய சட்டங்களே....!!


=========================================
குறிப்பு : ” இந்த விசித்திரப்பறவை ” யை எனக்கு கொடுத்த அருமை தங்கை கிருத்திகா தாஸ்-க்கு நன்றிகள்..!
===========================================
இரா.சந்தோஷ் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக