வியாழன், 22 ஆகஸ்ட், 2013

ஈழத்து ஆவி பேசுகிறது .

தமிழ் இனமே
திராவிட இனமே !
நலமா ?
உனக்கென்ன நலமாகத்தானே
உள்ளாய் ?
நம் இனம்
நம் இனமென்று சொல்லிய
நம்பிக்கை துரோகிதானே நீ !
அன்று ……….
யாழ்ப்பாணத்தில்
பாழ்பட்டோம்
மன்னாரில்
மரணித்து போனோம்.
முல்லைத்தீவில்
முகம் சிதைந்தோம்
கிளிநொச்சியில்
கிழிக்கப்பட்டோம்
வவுனியாவில்
விலாசம் இழந்தோம்
திருக்கோணமலையில்
தகர்க்கப்பட்டோம்
மட்டக்களப்பில்
மடிந்து போனோம்
புத்தளம் , அம்பாறையில்
புதைக்கப்பட்டோம்

ஆனால் நீ ……..
தமிழ் நாட்டிலும்
அயல் நாட்டிலும்
என் இனம்
என் இனமென்று
ஆவேசமாய்………
கை உயர்த்தி…………
நரம்பு புடைக்க…………
நடித்து கொண்டிருந்த
கூத்தாடி தானே நீ …!!!
எங்களை காப்பாற்ற போராடாத
ஈனப்பிறவி நீ ! - இன்று
ஈழம் என்
தொப்புள் கொடி என்கிறாய் ?
சுயப்புத்தி இல்லாத நீ –எங்களுக்கு
சுயநிர்ணய உரிமையை கோருகிறாய்

திராவிடம் திராவிடன் என்றாயே ..
துரோக திராவகத்தையல்லவா
தூவி எங்களை சிதைக்க செய்தாய் …

என் இனத்தை அழித்தவன்
மார்பில் குத்தினான்
என் இனமென்று சொல்லியே
முதுகில் அல்லவா நீ குத்திவிட்டாய்.

அட ச்சீ
இன்னும் என்ன வேஷம் ?

எங்களின் மரண
சாம்பலை பூசிக்கொண்டு
மீண்டும் நடித்து
மிச்ச மீதியாகிப்போன
எம் பிள்ளைகளை
கொன்றுவிடாதே ?

அங்கே
என் வெந்துப்போன
எலும்பின் கரியை
வணங்கும் கரிகாலன்
வளர்ந்து கொண்டிருக்கிறான்……..
புலியென புறப்படுவான்.
தமிழீழம் பிறக்க வைப்பான்.
தயவு செய்து அவனை
இம்சைப்படுத்தாதே ….

தமிழனே ! திராவிடனே !
எப்பொழுதும் போல
முப்பொழுதும்
நீ நலமாக இரு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக